Thursday, August 15, 2013

காங்கிரஸ். எத்தனை முறை மூக்குடைபட்டாலும், தன் முயற்சியில், மனம் தளராத விக்ரமாதித்தன் மாதிரி, விடா முயற்சியோடு, தொடர்ந்து, அதே காரியத்தைச் செய்து வருகிறது. நரேந்திர மோடி, பா.ஜ.,வின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டதை விரும்பாத சிலர், மோடிக்கு எதிராக, அறிக்கை விடுவதோடு, ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை, மோடியோடு ஒப்பிட்டுப் பேசி, சவுகானுக்கு கொம்பு சீவத் துவங்கியுள்ளனர். ஆனால், சவுகானோ, "மோடியின் மகத்தான பணிகளை, நம் நாட்டின் இரும்பு மனிதர் என, அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் செயல்பாடுகளுடன் மட்டுமே ஒப்பிட முடியும்; படேலை போன்றவர் மோடி' என, பாராட்டி, "பேஸ்புக்'கில், குறிப்பிட்டுள்ளார். சாதாரணமாகவே குதிக்கும் காங்கிரஸ் காரர்களுக்கு, சவுகான், மோடியை, படேலுடன் ஒப்பிட்டதும், பொங்கி எழுந்து விட்டனர். அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ரஷீத் ஆல்வி, "சர்தார் படேல், நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். நாட்டு மக்களின் நலனுக்காக சிறை சென்றவர். மோடியை, படேலுடன் ஒப்பிடுவது, படேலை களங்கப்படுத்தும் செயல்' என்று, எகிறி எகிறி குதித்திருக்கிறார். படேல், வெள்ளையர்களிடமிருந்து நாடு சுதந்திரம் பெற போராடினார் என்றால், மோடி கொள்ளையர்களிடமிருந்து, நாட்டை மீட்க, தற்போது, போராட்டத்தைத் துவங்கி இருக்கிறார். ரஷீத் ஆல்வி உட்பட, நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரிந்த உண்மை இது. சரி இருக்கட்டும். மோடியை, சர்தார் படேலுடன் ஒப்பிட்டதற்கு, இந்த குதி குதிக்கின்றனரே, நாட்டில், காந்தி என்று சொன்னாலே, அது, பொக்கை வாய் புன்னகையோடும், கையில் ஒரு தடியோடும், முழங்கால் வரை தெரியும் பஞ்சகச்சம் கட்டிய, தேசத் தந்தை காந்தியை மட்டுமே குறிக்கும். ஆனால், அந்த காந்தி என்ற பெயரை, காங்கிரசார் எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றனர்! இந்திரா பிரியதர்ஷினி என்ற பெயர் கொண்ட நேருவின் மகள், பெரோஸ் காந்தியை மணம் முடித்துக் கொண்டதால், இந்திரா காந்தி ஆனார். அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு, ராஜிவ், சஞ்சய் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், ராஜிவ் காந்தி, சஞ்சய் காந்தி என்றே அழைத்து புளகாங்கிதமடைந்தனர். ராஜிவை கரம் பிடித்த காரணத்தால், சோனியா, சோனியா காந்தி ஆனார். நியாயமாக சோனியா ராஜிவ் என்றல்லவா அழைக்க வேண்டும். அதோடு விட்டனரா? ராஜிவ் - சோனியா தம்பதிக்கு பிறந்த பிள்ளைகளையும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்றே அழைத்து, ஆனந்தக் கூத்தாடி கொண்டிருக்கின்றனர். யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்றால், ராபர்ட் வதேராவைக் கூட, வதேரா காந்தி என்றோ, ராபர்ட் காந்தி என்றோ அழைத்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. காந்தி பெயரை, இப்படி இந்திரா பிரியதர்ஷினியின் வழித்தோன்றல்கள், "காபிரைட்' எடுத்து, சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்க, மோடியை, படேலுடன் ஒப்பிட்டால் மட்டும், காங்கிரஸ்காரர்களுக்குப் பொத்துக் கொண்டு வருகிறதோ...!


No comments:

Post a Comment