Sunday, August 18, 2013

மத்திய அரசு, அதன் திட்டங்களுக்காக ஒதுக்கிய தொகையை முறையாக பயன்படுத்தவில்லை எனவும், அத்தொகை பயன்படுத்தப்பட்டிருக்கும் முறை சந்தேகத்தை எழுப்பும் வகையில் இருப்பதாகவும் சிஏஜி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பார்லிமென்ட்டில் சிஏஜி இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்து, அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இது பார்லி.,யில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.

அரசின் செலவுத் தொகை :

2011-12ம் நிதியாண்டில் மத்திய அரசு பல்வேறு துறைகளில் வகுக்கப்பட்ட திட்டங்களுக்காக ஒதுக்கிய தொகை, செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றின் தணிக்கை விபரங்களையும், அதில் காணப்படும் முரண்பாடுகளையும் சிஏஜி அறிக்கையாக பார்லி.,யில் தாக்கல் செய்தது. இதில் நிதி கணக்கு விவரப்படி, திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.2,41,668 கோடி. இ-லேகா புள்ளி விபரத்தின்படி செலவிடப்பட்ட மொத்த தொகை ரூ.2,93,481 கோடி ஆகும். மத்திய திட்ட கண்காணிப்பு அமைப்பின் திட்ட செலவு ரூ.3,27,011 கோடி. முரண்பாடான இந்த புள்ளி விபரங்கள் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த அனைத்து புள்ளி விபரங்களும் நிதி‌த்துறை அமைச்சகத்தின் நிதி கட்டுப்பாட்டு பிரிவால் தொகுக்கப்பட்டு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரசால் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட உண்மையான தொகை எவ்வளவு, செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து உண்மை விபரம் தெரியவில்லை.

சிஏஜி தகவல் :

சிஏஜி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : இந்த 3 புள்ளி விபர அறிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டதாக உள்ளது; இவைகள் அனைத்தும் திட்ட செலவுகள் குறித்து அளிக்கும் தகவலில் குறைபாடுகளை கொண்டதாகவும் உள்ளன; 2011-2012ம் ஆண்டில் அரசு திட்ட செலவு 76 சதவீதம் ஆகும்; இதற்காக ரூ.4,12,394 கோடி செலவிடப்பட்டுள்ளது; ஆனால் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.4,41,547 கோடி ஆகும்; இதில் பெரும்பகுதியான தொகை எந்தவொரு மாநிலத்தின் மாவட்ட அமைப்பிற்கோ அல்லது யூனியன் பிரதேசங்களுக்கோ நேரடியாக ஒதுக்கப்பட்டதற்கான எந்தவொரு விபரங்களும் தெரிவிக்கப்படவில்லை; அளிக்கப்பட்ட நிதி, அதற்கான காரணம், அது செலவிடப்பட்ட துறை, திட்டம் ஆகியன போன்ற முக்கிய விபரங்கள் ஏதும் தெளிவுபடுத்தப்படவில்லை; இதனை திட்ட கண்காணிப்பு குழுவும் சரிபார்க்கவில்லை; நிதித்துறை அமைச்சகத்தின் செலவு புள்ளி விபரங்களும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இவ்வாறு சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் செலவு கணக்குகள் அனைத்தும் நிதித்துறை அமைச்சகத்தின் கணக்கு கண்காணிப்பு அமைப்பாலேயே கண்காணிக்கப்படுகிறது. இந்த கணக்குகள் அனைத்தும் சிஏஜி.,யால் தணிக்கை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பிறகே பார்லி.,யில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன்படி தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின் விபரம், அதற்கான ரசீதுகள் உள்ளிட்டவைகள் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment