Wednesday, February 27, 2013

வர்ணம் பிறப்பால் ஏற்படுகிறது என்பதை மறைக்க பார்க்கிறீர்களா ? கீதையில் உங்கள் கிருஷ்ணர் சூத்திரனையும், பெண்களையும், வைசியனையும் இழிவு படுத்த்துகிறாரே ?

வர்ணம் என்கிற தன்மை அல்லது குணம் பிறப்பால் ஏற்படுகிறது. இதை நான் மறுக்கவே இல்லை. இதை மறுத்தால் கர்ம வினை அல்லது கர்ம பந்தம் எனும் செயல்களின் தாக்கத்தை மறுப்பது போல் ஆகும். நாம் என்ன செய்கிறோமோ அதை தான் பெறுகிறோம். ஆகையால் முற்பிறவியில் நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்றவாறே அடுத்த பிறவியில் அத்தகைய சூழ்நிலையில் பிறக்கிறோம்.

ஆனால் இங்கே ஜாதி எனும் பிறப்பால் மட்டுமே வரும் ஒரு சமூக பந்தத்தை நான் குறிப்பிடவில்லை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், முற்பிறவிகளில் அற வழிகளில் சென்று, ஆண்மீகத்தில் லயிக்கும் ஒருவன் அடுத்த பிறவியில் வர்ண ரீதியாக பிராமண குணத்தோடு பிறக்கக்கூடும். அதாவது அவன் ஜாதி அடிப்படையில் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருக்கலாம் ஆனால் அவன் உயர்ந்த ஆண்மீகவாதியாக, ஒழுக்கமானவனாக ஒரு நல்ல குடும்பத்தில் பிறக்கிறான்.

அதே போல் பூர்வ ஜண்மங்களில் கீழ்தரமான செயல்களை புரிந்தவன், இப்பிறவியில் ஜாதி அடிப்படையில் பிராமணனாகவே பிறந்திருந்தாலும், ஒரு ஒழுக்கம் கெட்டவனாகவே இருப்பான்.

ஆக எந்த ஜாதியில் பிறக்கிறான் என்பதை விட அவன் எப்படிப்பட்ட அடிப்படையான குணநலன்களோடு பிறக்கிறான் என்பதே முக்கியம். அதைதான் வர்ணம் குறிக்கிறது.

எப்படிப்பட்ட வர்ணத்தில் ஒருவன் பிறந்தாலும் அவன் தன் செயல்கள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதே உண்மை. செய்யும் செயல்களையே வேள்வி என்று அழைக்கிறார்கள். ஆக நல்லதொரு வேள்வியை நடத்துபவன் இறைவனை அடைகிறான். அவன் எப்படிப்பட்ட தன்மைகளோடு பிறந்திருப்பினும் சரி.

"மாம் ஹி பார்த வ்யபாச் ரித்ய" எனத் தொடங்கும் 9/32 ஸ்லோகத்தில் இதையே கிருஷ்ணன் வலியுறுத்துகிறான்.

பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் பாவப் பிறவி எடுத்தவர்கள் என்று யாராக இருந்தாலும் என்னை தஞ்சமடைந்து அனைத்திற்கும் மேலான மோக்ஷத்தை அடையலாம் என்கிறார்.

இங்கே தெள்ள தெளிவாக கூறியிருப்பது என்ன வென்றால், உடல் ரீதியாக வலிமை குறைந்த பெண்களும், ரஜோ குணம் அதிகம் கொண்டவ வைசிய தண்மை உடையவரும், தமோ குணம் அதிகம் கொண்ட சூத்திர தண்மை உடையவரும், முன் ஜன்மத்தில் பெரும் பாவங்களை செய்தவர்களும் என அனைவரும் இறைவனை அடையலாம் என்பது தான். அதாவது இறைவனை அடைவதற்கு எதுவுமே தடையில்லை என்பதைதான் இந்த ஸ்லோகம் வலியுறுத்துகிறது.

"இன்றைய செயல்களால் நாளைய விதியை நிர்மாணிக்கின்றாய்" என்று சுவாமி விவேகாணந்தர் இதைத்தான் சொல்கிறார்.

நீ எதில் வேண்டுமிருந்து வேண்டுமானாலும் தப்பித்து கொள்ளலாம் ஆனால் நீ செய்த செயல்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது. அப்படி தப்பிப்பதற்க்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது 'நான்', 'எனது', எனும் எண்ணத்தை துறந்து இறைவனிடம் தஞ்சம் புகுந்து நம் கர்ம வினைகளை அவன்பால் தந்துவிடுவதுதான்.

எது நம்மை பாதிக்கிறது ? எது நம்மை இன்பத்திலும் துன்பத்திலும் மாற்றி மாற்றி நம்மை அலைக்கழிக்கிறது ? நாம் நமது என்ற எண்ணம் தானே ? ஆக அந்த நான், எனது என்கிற நிலையை துறந்து எவன் ஒருவன் இறைவனை தஞ்சம் அடைகிறானோ அவன் இறைவனை அடைகிறான், அவன் எப்படிப்பட்டவன் ஆக இருப்பினும் சரி என்பதையே இந்த ஸ்லோகம் விளக்குகிறது.

No comments:

Post a Comment