Thursday, March 14, 2013

அவுல் பகிர் ஜைனுலப்தீன் அப்துல் கலாம்" என்ற அந்த ஏழை சிறுவன் ராமேஸ்வரத்தில் வீடு வீடாய் சென்று பேப்பர் போட்டு கொண்டிருந்த போது, பிற்காலத்தில் இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகனைகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுவான் என்று யாரும் நினைக்கவில்லை. இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னாவை" பெறுவான் என்றும், இந்தியாவின் உயர்ந்த பதவியான "ஜணாதிபதி" பதவியை அடைவான் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஆனால் அது நடந்தது.

அந்த சிறுவனிடத்தில் என்ன இருந்தது ? மற்றவர்களிடத்தில் என்ன இல்லை ?

அந்த சிறுவனிடத்தில் அழிக்க முடியாத கணவுகள் இருந்தன. விலை மதிப்பற்ற கணவுகள், அதை எப்படியும் அடைந்தே தீரவேண்டும் என்ற லட்சியமும், விடாமுயற்சியும்.

கலாமின் வாழ்கை, ஒரு சாதாரணவனுக்கு எழுச்சியூட்டும் ஒரு புரட்சிக் கவிதை. இராமேஸ்வரத்தின் பஞ்சாயத்து எலிமென்டரி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த கலாம் தன் கனவுகளின் விதைகளை அங்குதான் வாங்கினார். "முத்து ஐயர்" எனும் ஆசிரியர் கலாமிற்கு நல்ல பழக்க வழக்கங்களையும், உயர்ந்த நோக்கங்களையும் விதைத்தார்.

அவரின் பத்தாம் வயதில், ஐந்தாவது படிக்கும் போது, "ஸ்ரீ சிவ சுப்ரமணிய ஐயர்" எனும் ஆசிரியர் கரும் பலகையில் பறவைகள் எப்படி பறக்கின்றன என்று வரைபடம் வரைந்து விளக்குகிறார். அது புரிந்ததா என்று கேட்கும் போது கலாம் தனக்கு புரியவில்லை என்று நேர்மையுடன் சொல்ல, ஆசிரியர் அவர்களை மறுநாள் கடற்கரைக்கு அழைத்து செல்கிறார். பறவைகள் எப்படி இறக்கையை அசைகின்றன, எப்படி அதன் மூலம் சக்தியை உண்டாக்கி எழும்புகின்றன என்று விளக்குகிறார். எப்படி அவைகளின் இறகு பகுதியும், வால் பகுதியும் இனைந்து செயலாற்றுகின்றன என்றும் விளக்குகிறார். இதை சொல்லிவிட்டு அவர் ஒரு கேள்வி கேட்கிறார். "பறவைகளின் உடலில் "எஞ்சின்" எங்கு உள்ளது ? அதற்கு ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது" ? என்று. பின்னர் அவரே அதற்கு விளக்கமும் தருகிறார். "பறவையின் எஞ்ஜினும் ஆற்றலும் அதன் தேவைகளினால் ஏற்படும் உந்துகோளினால் தான்" என்று. அப்துல் கலாம் பின்நாளில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, அது வெறும் பறவைகள் பறப்பதை பற்றிய புரிதலாக எனக்கு இல்லை, விண்ணில் பறப்பதை குறித்து மேலும் நிறைய படிக்க வேண்டும் என்கிற கனவின் தொடக்கம் என்கிறார்.

கனவு கானுங்கள் என்பதை பலர், எந்த முயற்சியும் இல்லாமல் சோம்பேறித் தனமாக மனதில் அசைப் போடுவது என்று நினைக்கக் கூடும். மாறாக கனவு என்பதன் விளக்கத்தை அறிஞர் அப்துல் கலாமே சொல்கிறார்.

"கனவுகள் உறங்கும் போது நீங்கள் காண்பது அல்ல. மாறாக உங்களை உறங்க முடியாமல் வைத்து, அதை அடைய போராட செய்வது". என்கிறார்.

எதை குறித்து கனவுகள் காணலாம் ? சிலருக்கு நாலு பேரை அழிப்பது கணவாய் இருக்கலாம். சிலருக்கோ தன்னை மட்டுமே உயர்த்தி கொள்ளும் சுயநலக் கனவுகளும் இருக்கலாம். ஆனால் தானும், தான் சார்ந்த நாட்டையும் உயர்த்திட எத்தனை பேர் கனவு கண்டிருப்பர் ? மேதகு கலாம் அவ்வாறு கண்டார்.

கலாமின் தந்தை "ஜைனுலப்தீன்" படகுகளை வாடகைக்கு விடும் ஒரு ஏழை இஸ்லாமியர். கலாம் சைவ உணவையே உட்கொள்வார், எந்த வித தீய பழக்கங்களும் இல்லாதவர். அவரின் தேசப்பற்று எல்லையில்லாதது. அவரின் தேசப் பங்களிப்பை குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். மெட்ராஸ் இண்ஜினியரிங்க் டெக்னாலஜியில், "ஏரோனாடிகல் இண்ஜினியரிங்கில்" பட்டம் பெற்ற கலாம், இஸ்ரோ மற்றும் டி ஆர் டி ஒ ஆகிய அமைப்புகளில் பரிபுணிந்தார். அவர் ந‌ம் இராணுவத்தை தன்னிறவு பெறச் செய்வதில் பெரும் பங்காற்றி உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். வாஜ்பாய் அரசால் செய்யப்பட்ட போக்ரான் அனுகுண்டு பரிசோதனையிலும், இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகளை உருவாக்குவதிலும் கலாம் முக்கிய பங்காற்றினார். ஆனால் கலாம் அவர்கள் தொழில் நுட்பத்தை வெறும் இராணுவ உபயோகத்திற்கு மட்டும் நிறுத்தவில்லை. பொதுமக்களுக்கு பயன் பெறும் வண்ணமும் உயர்ந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தினார்.

அக்னி ஏவுகணைக்காக‌ உயர் தொழில் நுட்பத்தின் உதவியோடு கண்டுப்பிடிக்கப்பட்ட இலகுவகை "கார்பன்' சாதணங்களை, போலியோவில் கால்களை இழந்தவர்களுக்கு, செயற்கை கால்களை தயாரிப்பதில் அவர் உபயோகித்தார். நான்கு கிலோ எடையில் இருந்த செயற்கை கால்கள், இதனால் வெறும் நானூறு கிராம் எடைக்கு குறைந்தது. கலாம் "கிரீஸ்" நாட்டின் "ஏதண்ஸ்" நகரில் பேசுகையில் இதை குறிப்பிடுகிறார். "அந்த சிறுவர்கள், அந்த இலகுவகை செயற்கை கால்களை பொறுத்திக் கொண்டு ஓடுகையில் அவர்களின் பெற்றோர்கள் கண்களில் ஆணந்த கண்ணீர் வழிந்தது. அதுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரும் ஆணந்தம்" என்று.

கலாம் இந்தியா முழுதும் சுற்றி பல மாணவர்களோடு கலந்தாய்வு செய்து அவர்களை ஊக்குவித்தார். குறைந்த விலையில் மருந்துகள் கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதை முன்மொழிந்தார். தொழில் நுட்ப வளர்ச்சியே ஒரு நாட்டின் மிகப்பெரும் பலம் என்று அவர் நம்புகிறார். தனியார் மற்றும் அரசு நிறுவணங்கள் ஒன்றினைந்து தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்காற்றிட வேண்டும் என்பது அவர் வாதம்.

ஜணாதிபதியாக இருந்த போதும், எந்த பகட்டும் காட்டாத எளிய மணிதர். அவரின் எளிமையை குறித்து நிறைய சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம். கலாம் மதங்களை கடந்த நல்ல இஸ்லாமியர். கீதை, திருக்குறள் மற்றும் பல இலக்கியங்களிலும் புலமை பெற்றவர். நன்றாக வீணை வாசிக்க கூடியவர்.

கலாமின் அக்னி சிறகுகள் என்ற புத்தகம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது. 2020 இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற லட்சியத்தை நம்முன் விதைத்தவர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மிகச் சிறந்த மணிதர்.

No comments:

Post a Comment