Wednesday, July 17, 2013

"ராய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மோடி, "நான் ஒரு இந்து தேசியவாதி; தேச பக்தன். முதலில் எனக்கு, தேசம் - அதன் வளர்ச்சி தான் முக்கியம்' என்று சொன்னதும், திக்விஜய்சிங், "தேசத்தை மதத்தின் பேரால் துண்டாடாதே...' என்கிறார்.தன்னை ஒருவன் இந்து என்றோ, முஸ்லிம் என்றோ, கிறிஸ்தவன் என்றோ, சொல்லிக் கொள்வதில் என்ன தவறு? மகாத்மா காந்தியே, ராம ராஜ்யம் ஏற்பட வேண்டும் என்றார். அப்படியானால், அவர் இந்து தீவிரவாதியா? குஜராத்தில், 2002ல் நடந்த மதக்கலவரம் பற்றி, மோடியிடம் கேட்ட போது, "நான் தவறு செய்யவில்லை. என் மீது தவறு இருந்தால் தானே, நான் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் முதல்வராக, அப்போது தான் பொறுப்பேற்றேன். என் காரை, டிரைவர் ஓட்டும் போது, ஒரு நாய்க்குட்டி காரின் அடியில் மாட்டிக் கொண்டால், அதன் வலி என்ன என்று எனக்குத் தெரியும்...' என்று கூறியுள்ளார்."ஒரு சிறு பிராணியின் வலி என்ன என்று தெரியும். அப்படியிருக்க, ஒரு சமூகத்தின் வலி என்ன என்று, நான் அறிய மாட்டேனா' என்பது தான் பொருள். இந்த அர்த்தம் கூட புரியாத அளவு, அரசியல் மக்குகளோ காங்கிரசார் எனக் கருதத் தோன்றுகிறது!
இதையறியாமல், "நாய்க்குட்டி என்று சொன்னதை, வாபஸ் வாங்கு'என்று, பொங்கி எழ ஆரம்பித்து விட்டனர் முலாயம்சிங் யாதவும், பரதனும், திக்விஜய்
சிங்கும்.முலாயம்சிங் ஆளும், உ.பி.,யிலோ, கம்யூனிஸ்ட்கள் ஆண்ட மேற்கு வங்கம், கேரளாவிலோ அல்லது காங்கிரஸ் ஆளும் இந்நாட்டிலோ, முஸ்லிம் சமுதாயத்துக்கு என்ன நன்மை செய்தனர் இவர்கள்? இன்னும் அந்த சமுதாயத்தினர் பலர், அவல நிலையில் தானே இருக்கின்றனர்! "விடுதலைப் புலிகள்' இயக்க நிறுவனர், பிரபாகரன் முன்பு அளித்த ஒரு பேட்டியில், "ராஜிவ் படுகொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டபோது, "அது ஒரு சோக சம்பவம்' என்று, ஒற்றை வரியில் பதில் சொன்னபோது, பொங்கி எழாத காங்கிரசார், மோடியின் நாய்க்குட்டி வலிக்கு, ஏன் பொங்கி வழிகின்றனர்?ஏனெனில், பிரபாகரனிடம் ஓட்டு இல்லை; இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் ஓட்டு இருக்கிறதே, அது தான் காரணம்.ஓட்டு மட்டுமே கண்ணுக்குப் புலப்படும் மக்களுக்கு, மதச்சார்பின்மை பற்றி புரியாததில் ஆச்சரியமில்லை!

No comments:

Post a Comment