Monday, February 10, 2014

முடிவுக்கு வரும் அமெரிக்க பிணக்கு; மோடியை சந்திக்கிறார் நான்சி

1hrs : 58mins ago
Top news
புதுடில்லி: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு விசா வழங்குவதை அமெரிக்கா பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது.  மோடி மீதான மதவாத குற்றச்சாட்டுக்களை காரணமாக காட்டி, அமெரிக்கா இந்த நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின்னரும், அமெரிக்கா தனது நிலையில் பிடிவாதமாக இருந்தது.

இந்நிலையில், வரும் 2014ம் லோக்சபா தேர்தலில், மோடியின் வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் இந்திய மீடியாக்களின் கருத்து கணிப்புக்கள் மட்டுமன்றி, சர்வதேச ஏஜன்சிகளின் கருத்து கணிப்பும் மோடிக்கு சாதகமாகவே புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளன.

இதையடுத்து, மோடி விஷயத்தில் அமெரிக்கா தனது நிலையை மாற்றிக் கொள்ள துவங்கியிருக்கிறது. முதல்கட்டமாக, இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நான்சிபவல் , நரேந்திரமோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு குஜராத், காந்திநகரில், வரும் 14 அல்லது 15 தேதிகளில் நடக்கும் என்று அமெரிக்க தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடிக்கு, கடந்த 2005ம் ஆண்டு, விசா வழங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன் ஆகியவையும் மோடிக்கு விசா வழங்க தடை விதித்திருந்தன. ஆனால், மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் அந்த நாடுகள் அந்த தடையை வாபஸ் பெற்றுக் கொண்டன.

அமெரிக்க தூதர் சந்திப்பு குறித்த அறிவிப்பை தொடர்ந்து, பா.ஜ.,வின் வெளிநாட்டு தொடர்பு அமைப்பாளர் சந்திரகாந்த் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அமெரிக்க அரசின் இந்த முடிவை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். இந்த முடிவால், இந்திய-அமெரிக்க நட்புறவு மேலும் வலுவடையும்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment